புதன், 24 டிசம்பர், 2014

ஐயப்பன் பதினெட்டுப் படி




ஐயப்பன் கோயிலின் முன்பாக இருக்கும் பதினெட்டுப் படிகளில் பதினெட்டுத் தெய்வங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். இது போல் இந்தப் படிகள் மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களையும், நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டிய சில செயல்பாடுகளையும் உணர்த்துவதாக உள்ளது.

பதினெட்டுப் படிகளின் தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலின் முன்புள்ள பதினெட்டுப் படிகளிலும் பதினெட்டுத் தெய்வங்கள் இருந்து அருள் செய்கின்றனர். 

1. விநாயகர்
2. சிவன்
3. பார்வதி
4. முருகன்
5. பிரம்மா
6. விஷ்ணு
7. ரங்கநாதர்
8. காளி
9. எமன்
10. சூரியன்
11. சந்திரன்
12. செவ்வாய்
13. புதன்
14. குரு
15. சுக்கிரன்
16. சனி
17. ராகு
18. கேது

பதினெட்டு படிகள் காட்டும் குணங்கள்

1. காமம்:

பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

2. கோபம்:

கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

3. பேராசை :

பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

4. மதம்:

யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

5. பொறாமை:

மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

6. வீண் பெருமை:

அசுர குணமானது நமக்குள் இருக்கக் கூடாது.

7. அகந்தை:

தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

8. சாத்வீகம்:

விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

9. ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

10. தாமஸம்:

அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

11. ஞானம்:

எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

12. மனம்:

நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

13. அஞ்ஞானம்:

உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

14. கண்:

ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

15. காது:

ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

16. மூக்கு:

ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

17. நாக்கு:

கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

18. மெய்:

இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவங்கள்

1. முதல் படி:

விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும்.

2. இரண்டாம் படி:

சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெற வேண்டும்.

3. மூன்றாம் படி:

கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவமடைய வேண்டும்

4. நான்காம் படி:

ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேற வேண்டும்.

5. ஐந்தாம் படி:

சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்திட வேண்டும்.

6. ஆறாம் படி:

தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கெல்லாம் நாம் போய் விடாதிருக்க வேண்டும்.

7. ஏழாம் படி:

ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே கடவுள்தான் என உணர்ந்திட வேண்டும்.

8. எட்டாம் படி:

அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருந்திட வேண்டும்.

9. ஒன்பதாம் படி:

ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்ந்திட வேண்டும்.

10. பத்தாம் படி:

விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண வேண்டும்.

11. பதினொன்றாம் படி:

விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

12. பன்னிரண்டாம் படி:

பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்ப வேண்டும்.

13. பதின்மூன்றாம் படி:

ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்ந்திட வேண்டும்.

14. பதினான்காம் படி:

குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாகிட வேண்டும்.

15. பதினைந்தாம் படி:

தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

16. பதினாறாம் படி:

சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருந்திட வேண்டும்.

17. பதினேழாம் படி:

சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெற்றிட வேண்டும்.

18. பதினெட்டாம் படி:

மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால், அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே முழுமையாகச் சரணடைந்திட வேண்டும்.

ஐயப்பனின் கோயிலின் முன்புள்ள பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்து, நம் மனித வாழ்க்கையைப் படிப்படியாக உயர்த்திச் சென்றால் இறைவனை அடையமுடியும் என்று நாம் உணர்ந்து செல்ல வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக