ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை



ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை



நேரடியாக மோத முடியாத, மோத விரும்பாத எதிரிகளை - ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள வைக்க , உங்களுக்கு தேவையான ஆன்ம பலம் அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ கால பைரவர்.

ஸ்ரீ பைரவ அவதாரம்

அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு வெளிச்சத்திற்கு கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் : 
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லை களிலிருந்து விடுபட முடியும்.

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?
பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக